ஜகார்த்தா, ஜன 26 – இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பேர்லி டான் - எம். தீனா (Pearly Tan-M Thinaah) சாம்பியன் பட்டம் வென்று 15 ஆண்டுகால ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஜப்பானின் அரிசா இகாராஷி - மியு தாகஹாஷி ஜோடி காய்ச்சல் காரணமாக விலகியதை அடுத்து, மலேசிய ஜோடி ‘வாக் ஓவர்’ (Walkover) முறையில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடைசியாக 2011-ஆம் ஆண்டில் விவியன் ஹூ - வூன் கி வெய் இணை மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றதே மலேசியாவின் சாதனையாக இருந்தது.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த எம். தீனா, ஜப்பானிய வீராங்கனைகள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், களத்தில் விளையாடி வெற்றி பெறவே தாங்கள் ஆவலுடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இது பேர்லி - தீனா ஜோடி வெல்லும் 7-வது உலகத் தர வரிசைப் பட்டமாகும். முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சென் டாங் ஜியே - தோ ஈ வெய் (Chen Tang Jie-Toh Ee Wei) ஜோடி, டென்மார்க்கின் மத்தியாஸ் கிறிஸ்டியன்சன் - அலெக்சாண்ட்ரா போஜே இணையை 15-21, 21-17, 21-11 என்ற கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடினர்.
இதன் மூலம் இந்தத் தொடரின் வரலாற்றில் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் மலேசிய ஜோடி என்ற புதிய வரலாற்றைப் படைத்தனர்.
மலேசியாவின் வெற்றிக் கொண்டாட்டம் இதோடு நின்றுவிடாமல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கோ ஸி பெய் - நூர் இசுடின் (Goh Sze Fei-Nur Izzuddin) ஜோடியும் சாம்பியன் பட்டம் வென்று மலேசியாவிற்கு ‘ஹாட்ரிக்’ சாதனையை உறுதி செய்தனர்.
இந்தோனேசியாவின் ரேமண்ட் இந்த்ரா - நிக்கோலஸ் ஜோக்வின் இணையை 21-19, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தியதன் மூலம், ஒரே தொடரில் மூன்று பிரிவுகளில் மலேசியா பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இந்தத் தொடர்ச்சியான வெற்றிகள், மார்ச் மாதம் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ‘ஆல் இங்கிலாந்து’ (All England 2026) போட்டிக்கு மலேசிய வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.


