கோலாலம்பூர், ஜனவரி 6 - தேசிய மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி டான்-எம். தினா, 2026 மலேசியா ஓப்பன் போட்டியில் மிக உயர்ந்த இலக்கை நிர்ணயிக்க மறுத்துள்ளனர்.
உலகத் தரவரிசையில் 2ஆம் இடம் வகிக்கும் இந்த ஜோடி, சூப்பர் 1000 தரவரிசைப் போட்டி தங்களுக்கு இதற்கு முன் பெரிய சாதகத்தை அளித்த களம் அல்ல என்பதை ஒப்புக்கொண்டது. முடிவுகள் குறித்து அதிக அழுத்தம் கொடுக்காமல், சொந்த மண்ணில் ஆதரவாளர்கள் முன்னிலையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தங்களின் முக்கியக் கவனம் என்று பியர்லி கூறினார்.
"மலேசியா ஓப்பனில் நாங்கள் ஒருபோதும் சிறப்பாக விளையாடியதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, முதல் சுற்றைத் தாண்டி சிறப்பாக விளையாடுவதே எங்கள் முக்கிய இலக்கு," என்று தலைநகரில் மலேசியா ஓப்பனை எதிர்கொள்வதற்கான பயிற்சி அமர்வுக்குப் பிறகு சந்தித்தபோது அவர் கூறினார்.
கடந்த பதிப்புப் போட்டியில், பியர்லி-தினா ஜோடி முதல் சுற்றிலேயே இந்தோனேசியாவின் லேனி ட்ரியா மாயாசாரி-சித்தி ஃபாடியா சில்வா ரமாதந்தி ஜோடியிடம் 21-19, 14-21, 13-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இம்முறை தொடக்க ஆட்டத்தில்,உலகின் இரண்டாம் நிலை ஜோடியான பியர்லி-தினா, இந்தியாவின் ருடபர்னா பாண்டா-ஸ்வேடபர்னா பாண்டா ஜோடியை எதிர்கொள்ளவுள்ளனர்.
தேசிய நம்பிக்கை நட்சத்திரங்களான அவர்கள், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினால் தென் கொரியாவின் 6ஆம் நிலை ஜோடியான பேக் ஹா நா-லீ சோ ஹீயை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
மலேசியா ஓப்பன் போட்டி மொத்தப் பரிசுத் தொகையாக 1.45 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்குகிறது.


