கோல லங்காட், ஜன 26 - இந்த வருடம் புதியதாகக் கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட எலிசா சாம்சன் எமேனுவல், அங்கு வாழும் இந்தியர்களுக்கு ஜாலான் செர்டாங் பெல்லா, கம்போங் சுங்கை புவாயாவில் சுமார் 4 மில்லியன் செலவில் மின் சுடுகாடு கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மோரிப் கடற்கரையில் இந்தியர்கள் ஈமச்சடங்கைச் செய்ய தனியொரு இடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து எலிசா சாம்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஈமச்சடங்கை செய்ய வழங்கப்பட்ட இடம், மக்கள் குளிக்கும் இடத்தின் மிக அருகாமையில் இருந்ததால், வேறோரு இடத்தை ஒதுக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவாதக அவர் தெரிவித்தார். அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் கோல லங்காட் நகராண்மை கழகத்தால் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.
கூடுதலாகக் கோல லங்காட் நகராண்மை கழகத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் இடுகாடு பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இது குறித்து தன்னிடம் புகார்கள் வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதனால், அவர்களுக்கு இடுகாடு அமைப்பதற்காக ஒரு தனியிடம் வழங்க வேண்டும் என அவர் சிலாங்கூர் அராசங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையில், மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் சமூக தலைவர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்பு நலன்கள் பற்றிய தனது கருத்தையும் அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு நல்ல தலைவர் என்பவர் சுயநலம் பாராமல் பொதுநலத்துடன் பணியாற்றும் பண்பு கொண்டிருப்பது மிக முக்கியம் என்றார் எலிசா சாம்சன். அதுமட்டுமில்லாமல், அனைத்து மக்களிடமும் இனம், பின்னணி, சமயம், மொழி போன்ற பாகுப்பாடு இன்றி பழகும் மனப்பக்குவம் தேவை என்பதோடு மக்களுக்குச் சேவை ஆற்றுவதே முதன்மை குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என்றார்.
கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினராகப் பணியாற்றும் வரை தான் மக்களின் நலனுக்காகப் பாடுபடுவேன் என அவர் உறுதியளித்தார்.


