கோலாலம்பூர், ஜனவரி 19: ஊழலுக்கு எதிராக சமரசம் இன்றி போராட வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கண்டிப்பான உத்தரவுக்கு, நாட்டின் உள்துறை அமைச்சின் (KDN) முதன்மை வழிகாட்டியாகக் கொள்ளப்படும் என்று அவ்வமைச்சின் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் அனைத்து கொள்முதல் திட்டங்களும் கசிவு, முறைகேடு, ஊழல் மற்றும் வீண் விரயங்களை தவிர்க்கும் வகையில் இனி முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் தொடக்க விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலை ஒழிப்பதற்கான மன்னரின் செய்தி மிகவும் தெளிவானது என்று குறிப்பிட்டார்.
இந்த உறுதிப்பாட்டை வெறும் பேச்சோடு நிறுத்தாமல், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களை தடுக்க நேர்மையான மற்றும் கண்டிப்பான செயல்பாடுகள் மூலம் அதனை நிரூபிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"மாமன்னரும் பிரதமரும் ஊழலுக்கு எதிராக ஒரே குரலில் பேசும் போது, அது அனைத்து தரப்பினருக்கும் ஒரு வலுவான எச்சரிக்கையாக அமைகிறது," என்று சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
குறிப்பாக, உள்துறை அமைச்சின் கீழ் உள்ள சில துறைகள் குறித்து மாமன்னர் தமது உரையில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அமைச்சின் கொள்முதல் நடைமுறைகளை மேலும் சீரமைத்து, அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இது வலுப்படுத்தும் என்றார்


