கோலாலம்பூர், ஜன 19- கடந்த ஆண்டு மலேசியா ஆசியான் (ASEAN) அமைப்பிற்குத் தலைமை தாங்கிய விதம் மற்றும் நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தின் 15-ஆவது கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து உரையாற்றிய மாமன்னர், கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மலேசியா 4.7 சதவீத நேர்மறையான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை தகுந்த மட்டத்தில் அரசாங்கம் கட்டுப்படுத்தி உள்ளதோடு, நாட்டில் கடும் வறுமை விகிதம் 0.09 சதவீதமாக குறைந்து உள்ளதையும் அவர் பாராட்டிப் பேசினார்.
நாடாளுமன்ற இணையதளத்தின் படி, மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 20 முதல் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


