ஷா ஆலம், ஜன 2 — பெரியவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி ரீதியான தனிமை குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அல்லது மத விழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் சாதாரணமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இது உண்மையில், உலகளவில் தற்போது நிகழும் கடுமையான மனநலப் பிரச்சனையில் ஒன்றாகும் என்பதை பலர் உணரவில்லை.
சமூக ஊடகங்கள் உட்பட பல காரணிகளால் பாதிக்கப்பட்டு, உணர்ச்சி ரீதியான தனிமை பிரச்சனை மலேசியாவில் அதிகரித்து வருவதாக மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக உளவியலாளர் துணைப் பேராசிரியர் டாக்டர் சித்தி ஹஸ்லினா அலியாஸ் கூறினார்.
“சுய-தனிமை பல காரணிகளால் ஏற்படுகிறது. அதாவது அதிர்ச்சி அல்லது கடந்த கால அனுபவங்களால் ஏற்படுகிறது.
“ஆனால், சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்ட வழக்குகளும் உள்ளன. அவை கோவிட்-19 காலகட்டத்தில் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையால் (MCO) மேலும் மோசமடைந்தன,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
நபர் ஒருவர் தன் சொந்த உணர்வுகளை ஒப்புக்கொள்ளவோ அல்லது வெளிப்படுத்தவோ மறுக்கும் போது உணர்ச்சி ரீதியான தனிமை தொடங்குகிறது அவை இறுதியில் தனிநபரின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று டாக்டர் ஹஸ்லினா மேலும் கூறினார்.
உதாரணமாக, கிழக்கு கலாச்சாரங்களில், குறிப்பாக மலேசியாவில், துக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பொறுமையாக இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள், இது முற்றிலும் பொருத்தமானதல்ல என்றாலும், உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
“உணர்ச்சிகளை சரியாக நிர்வகிக்காதபோது, காலப்போக்கில் அவை சீர்குலைந்து மற்ற பிரச்சனைகளாக வளரும். இது முதலில் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு, நோயாக மாறக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என டாக்டர் ஹாஸ்லினா கூறினார்.
உணர்ச்சி ரீதியான தனிமை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது ஏனெனில், சமூகம் அதை ஒரு தனிநபரின் வாழ்க்கை முறையாகக் கருதுகிறது.
“பொதுவாக மக்கள் நிலைமை கடுமையாகும் போதுதான் சிகிச்சை பெறுகிறார்கள். உண்மையில், இந்த மற்ற உடல் நோய்களிலிருந்து வேறுபட்டதல்ல.
"இது ஆரம்பத்தில் கவனிக்கப்படாவிட்டால், அது பரவி மற்ற நிலைமைகளாக உருவாகலாம்," என்று அவர் கூறினார்.
இது சம்பந்தமாக, டாக்டர் ஹாஸ்லினா தனிமை உணர்வுகளைத் தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் சுய பாராட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் மற்றும் ஆன்மீக (மத) நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
"நாம் நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும் யதார்த்தமானவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் நலமாக இல்லாத நாட்கள் உண்டு. நலமாக இல்லாததில் தவறில்லை, ஆனால் அது அதிக நேரம் நீடிக்கக்கூடாது.
"நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். என் நோயாளிகளிடம் நான் கவனித்த பெரும்பாலான பாதுகாப்பு காரணிகள் ஆதரவான குடும்பங்கள் மற்றும் மத நம்பிக்கை ஆகும். இவை இரண்டும் மிக முக்கியமானவை," என்று அவர் கூறினார்.


