கோலாலம்பூர், டிசம்பர் 15- நேற்று காலை கோலாலம்பூர், ஜாலான் இஸ்தானாவில் நடந்த சாலை விபத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத மியான்மார் நாட்டு ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெஸ்ராயா நெடுஞ்சாலையில் இருந்து நகர்ப்புற மையத்தை நோக்கி வந்த 44 வயதுடைய அந்த நபர், வலது புறம் பாதையை மாற்ற முயன்ற போது, அதே பாதையில் நேராகச் சென்ற மலேசிய ஆடவர் ஓட்டி வந்த கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து காலை சுமார் 9.14 மணியளவில் ஏற்பட்டதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. தலையிலும் உடலிலும் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கப் பிரிவுத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார். உயிரிழந்தவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் காவற்படை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கார் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை,” என்றார் அவர். மேலும் இந்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள், விசாரணை அதிகாரி 019-448 2852 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


