கோலாலம்பூர், டிச 4 - நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 14,000க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 160 பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் காவல்துறையின் தரவுகள் காட்டுகின்றன. அதில் 6 முதல் 17 வயதுடைய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் தெரிவித்தார். அவர் 2025இன் பகடிவதை எதிர்ப்பு மசோதாவை மக்களவையில் சமர்ப்பித்தபோது இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆய்வின்படி 13 முதல் 17 வயதுடைய 8.6 விழுக்காடு மாணவர்கள் பகடிவதை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மாணவர்களுக்கு பொருந்தாமல் இருத்தல், பள்ளிகளில் பகடிவதை பிரச்சனைகளைக் களையும் நடைமுறைகள் ஒரே மாதிரியாக இல்லாதிருத்தல், மேலும் மனஉளைச்சல் மற்றும் புறக்கணிப்பு ஆகியவைகள் பகடிவதை சம்பவங்களைத் தடுப்பதற்கு பெரும் தடைகளாக உள்ளன என்றார்.
மலேசியாவின் 10,307 கல்வி நிறுவனங்களில் 5.13 மில்லியன் மாணவர்கள் உள்ள நிலையில், பகடிவதையைத் தடுக்க ஒரே மாதிரியான நடவடிக்கை முறை அவசியம் என்றும் அவர் விவரித்தார்.
கடந்த திங்கள் அன்று பகடிவதை எதிர்ப்பு சட்ட மசோத 2025 முதன்முறையாக முன்வைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட சட்ட மசோதப் பகடிவதையில் ஈடுப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு RM250,000 வரையிலான இழப்பீடு வழங்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளது.


