ஷா ஆலாம், 20 நவம்பர்- சிரம்பான் செண்டாயானில் உள்ள ஒரு உணவகத்தில் ஆடவர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் அசஹார் அப்துல் ரஹ்மான் உறுதிப்படுத்தினார்.
செண்டாயானில் அமைந்துள்ள உணவகத்தில் பாதிக்கப்பட்டவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இரண்டு வாகனங்கள் திடீரென அந்த இடத்துக்கு வந்து நின்றதாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் வாகனங்கள் நெருங்கியதை கவனித்த பாதிக்கப்பட்டவர் சாலையின் மறுபுறம் ஓடி தப்பிக்க முயன்ற போது துப்பாக்கிச் சூடு பட்டு விழுந்ததாக தெரிவித்தனர்.
இரவு 11.23 மணிக்கு MERS 999 அழைப்பின் மூலம் போலீஸ் தரப்பிற்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸ் மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்டவர் சூடு பட்ட காயங்களால் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. தற்போது உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் போலீஸ், இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் உடையவர்கள் முன்வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது




