சீனா, நவ 19 - மலேசிய-சீனா இளைஞர்களிடையே தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி (திவேட்) ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சியாக, BELIA MAHIR ஏற்பாட்டில் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் ஆதரவோடு MALAYSIA-CHINA YOUTH TVET (MCYTT) பயிற்சி திட்டம் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
திவேட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தலைமையில் சீனாவில் நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தில் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 19 இந்திய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவர்களைச் சீனாவிற்கு அழைத்து சென்று அங்குள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை அறிந்து கொள்ள வாய்ப்பளிப்பதாக, BELIA MAHIR அதிகாரி தினேஷ் தர்மலிங்கம் கூறினார்.
அதன் அடிப்படையில் மித்ராவின் ஆதரவோடு 19 இந்திய மாணவர்கள் சீனா விற்கு அழைத்து செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
'மலேசியாவை காட்டிலும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னோக்கி உள்ளது. ஆக, அங்குள்ள தொழில்நுட்பங்கள், கலாச்சாரங்கள், நவீன வளர்ச்சிகளை நமது இந்திய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகின்றனர்", என்றார் அவர்.
சீனாவில் உள்ள ZHEJIANG TRAFFIC TECHNICIAN கல்லூரிக்கு சுமார் 12 நாட்கள் மேற்கொண்ட இப்பயணத்தில் இயந்திர மின்னணுவியல், ரோபோடிக் உட்பட இன்னும் பல துறைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டதாக அவர் கூறினார்.
இதை தவிர்த்து, சீனாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மலேசிய மாணவர்கள் தங்களின் படைப்புகளை வழங்கியது, பயணத்தின் முத்தாய்ப்பு அங்கமாக அமைந்ததாக தினேஷ் தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தில், ஆண்டுக்கு சுமார் 500 இந்திய மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கும் நிலையில், வருங்காலங்களில் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில முயற்சிகளையும் தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார்.
- பெர்னாமா




