குளுவாங், நவ 17- ஜொகூர் மாநிலத்தின் பத்து பஹாட் - மெர்சிங் சாலையின் 44ஆவது கிலோமீட்டரில் கார் மீது சூப்பர் பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சூப்பர்பைக்கை ஓட்டிச் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் பஹ்ரின் முகமட் நோவெளியிட்ட அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் நேற்று (நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
"உயிரிழந்த 56 வயதுடைய உள்ளூர் நபர், ஆயர் ஈத்தாமில் இருந்து குளுவாங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்த் திசையில் வந்த கார் ஒன்றை 74 வயதுடைய முதியவர் ஓட்டி வந்துள்ளார்." என்று ACP பஹ்ரின் முகமட் நோ கூறினார்.
"திடீரென அந்த மலேசிய ஓட்டுநர், சந்தியில் வலதுபுறமாகத் திரும்பியபோது, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கோர விபத்தில், பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருப்பினும், கார் ஓட்டிச் சென்ற 74 வயது முதியவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார் என்றும் ACP பஹ்ரின் முகமட் நோ மேலும் கூறினார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




