ஷா ஆலம், அக் 10: அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் மத்தியில், 18 வயதுக்கும் மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்களுக்கு, தலா RM100 அடிப்படை ரஹ்மா (SARA) நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
இந்த உதவி, மக்கள் ரமடான் மற்றும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க உதவும்.
மேலும், மக்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட STR திட்டத்தின் நான்காவது கட்டம், எதிர்வரும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தொகை அக்டோபர் 18ஆம் தேதி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
இதற்காக RM2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தீபாவளி (அக்டோபர் 20) பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இரண்டு நாட்கள் 50% தள்ளுபடி வழங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவை அனைத்தும், 2026 ஆம் ஆண்டுக்கான மலேசிய அரசின் வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள், மக்களின் வாழ்வாதார சுமையை குறைத்து, பண்டிகை காலத்தில் நிதி நிவாரணத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.