கோலாலம்பூர், அக் 1 - கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கம் கண்டது முதல் நாட்டில் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோங்களை துடைத்தொழிக்கும் முதன்மை அமைப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
நாடு பல கோடி வெள்ளியை இழப்பதற்கு காரணமாக இருந்து வரும் ஊழல் மற்றும் வீண் விரயம் போன்ற நிதிக் குற்றங்கள் தற்போது மிகவும் சிக்கலாகும் அளவுக்கு வடிவம் மாறி வந்தாலும் எம்.ஏ.சி.சி. தனது பணியாளர்களுக்கு பயிற்சிகள் மூலம் குறிப்பாக தடளவியல் விசாரணையில் ஆக்கத்திறனளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிகாரிகளின் திறன் மற்றும் அறிவாற்றலை வளர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஊழல் தொடர்பான எந்தவொரு பரிமாற்றத்தையும் பின்தொடர்ந்து அடையாளம் காண முடிகிறது என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
நிபுணத்துவத்தைப் பிகிர்ந்து கொள்வதன் மூலம் அறிவாற்றலை வளர்ப்பது, நிர்வாக முறையை வலுப்படுத்துவது மற்றும் உயர்நெறியை உயர்த்துவதற்கு நிபுணர்கள் குழு மற்றும் இதர அமலாக்க நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைவதற்காக உள் மற்றும் வெளி பயிற்சிகளை வழங்குவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
அண்மையில் புத்ராஜெயாவில் நடைபெற்ற எம்.ஏ.சி.சி.யின் 58ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டிற்கு 27,700 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது மக்களின் நலனை பெரிதும் பாதித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.