மலாக்கா, 29 - வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி தனிநபர் கடன் வழங்க 58 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை லஞ்சமாகப் பெற்ற காரணத்திற்காக தற்போதைய நிதி ஆலோசகரும் முன்னாள் பயனீட்டாளர் கடன் நிர்வாகி என இரு வங்கி ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை கொண்டுவரப்பட்டது.
இருப்பினு, மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களை மறுத்து விசாரணை கோரினர்.
கோலாலம்பூரைச் சேர்ந்த நிதி ஆலோசகரான ஷாமீம் ஹஸ்ரீன் பஹ்ரின் எனும் ஆடவர், டிசம்பர் 2022 முதல் ஜூலை 2024 வரை RM50,581.51 லஞ்சம் பெற்ற ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இவர் வெவ்வேறு வங்கிகளில் ஐந்து வாடிக்கையாளர்களின் தனிநபர் கடன் விண்ணப்பங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்த உதவியதற்காக இந்த லஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் பயனீட்டாளர் கடன் நிர்வாகியான நூர்ஷ்யாஃபிகா அப்துல் லத்தீஃப், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023இல் RM8,000 லஞ்சம் பெற்ற இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009இன் பிரிவு 16(a)(A) கீழ் இருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நீதிமன்றம், ஷாமீம் ஹஸ்ரீனுக்கு RM17,000 மற்றும் நூர்ஷ்யாஃபிகாவுக்கு RM7,000 ஜாமீன் தொகையை அனுமதித்தது.
இருவருமே மாதத்திற்கு ஒருமுறை புத்ராஜெயா SPRM தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் தங்கள் சர்வதேச கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் போன்ற கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.




