கோத்தா கினபாலு, செப். 18 - ஸாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பாக காணொளி வழி அவதூறு பரப்பியதாக சந்தேகிக்கப்படும் 36 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த காணொளி தொடர்பில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து தமது துறைக்கு புகார் கிடைத்ததாக சபா மாநில காவல் துறை ஆணையர் டத்தோ ஜவுதே டிகுன் தெரிவித்தார்.
அந்த காணொளியில் அவதூறு அம்சங்கள் காணப்படுவதோடு ஒரு சிறுவயது பிள்ளையின் அடையாளமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இணைய வசதிகள் தவறான முறையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இப்புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபரைக் கடந்த 16 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் போலீசார் கைது செய்தனர் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அச்சந்தேக நபரிடமிருந்து இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 203ஏ மற்றும் 500வது பிரிவு, 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 15வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 233வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஜவுதே தெரிவித்தார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவதில் விவேகத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொளாளும்படி பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஸாரா கைரினா வழக்கு- காணொளி வழி அவதூறு பரப்பிய ஆடவர் கைது
18 செப்டெம்பர் 2025, 2:10 AM