ஷா ஆலம், செப். 9 - கூட்டசு நெடுஞ்சாலையின் 34.2வது கிலோ மீட்டரில் ஷா ஆலம் நோக்கிச் செல்லும் தடத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த ராட்சத விளம்பரப் பலகையை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம் பி.பி.ஜே.) நேற்றிரவு அகற்றியது.
இந்த நடவடிக்கை தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வேளையில் 1990ஆம் ஆண்டு மின்சார விநியோகச் சட்டத்தின் (சட்டம் 447) படி அந்த விளம்பர பலகைக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகத்தை அவர்கள் துண்டித்தனர் என்று மாநகர் மன்றத்தின் ஊடக செயலகம் கூறியது.
டத்தோ பண்டார் முகமது சாஹ்ரி சமிங்கோன் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 26ஆம் தேதி விளம்பரப் பலகையை அகற்றக் கோரும் உத்தரவு அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி விளம்பர உரிமையாளரை மாநகர் மன்றும் அழைத்தது. மேலும் விளம்பர பலகையை நீக்க செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
புதிய இடத்திற்கான பரிந்துரையை சமர்ப்பிக்க உரிமையாளரிடமும் கேட்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற விளம்பர பலகைகளை நிறுவுவது தொடர்பான சட்டப்பூர்வ விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியவர்கள் மீது மாநகர் மன்றம் தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று செயலகம் தெரிவித்தது.
மாநகரின் மன்றத்தின் தோற்றத்திற்கும் பொதுப் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நிபந்தனை மீறலை மாநகர் மன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. இந்த நடவடிக்கை மாநகரின் வளர்ச்சியை உறுதி செய்வதில் மாநகர் மன்றத்தின் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.