குவாந்தான், ஆக. 12 - இம்மாதம் 2 ஆம் தேதி பெந்தோங், கெந்திங் ஹைலேண்ட்ஸில் திருடப்பட்ட 300 கேசினோ சில்லுகளில் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 200 சில்லுகளை போலீசார் மீண்டும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சந்தேக நபர் ஒருவரிடமிருந்து வாங்கியதாகக் கூறப்படும் தலா 10,000 வெள்ளி மதிப்புள்ள 200 கேசினோ சில்லுகளை ஆடவர் ஒருவர் ஒப்படைக்க முன்வந்ததாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கெந்திங் கிராண்ட் லாபியில் சந்தேக நபரிடமிருந்து 200 சில்லுகளை எந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் சம்பந்தப்பட்ட நபர் வாங்கினார் என்று அவர் இன்று பகாங் மாநிலப் போலீஸ் தலைமையகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையில், மீதமுள்ள 100 கேசினோ சில்லுகளுடன்
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 'ஆட்டோகேட்' வழியாக தப்பிச் சென்ற சந்தேக நபரை அனைத்துலக காவல்துறையுடன் (இண்டர்போல்) இணைந்து தாங்கள் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் சில்லுகளை எடுத்துக் கொண்டு கெந்திங் ஹைலேண்ட்ஸில் உள்ள கேசினோவிலிருந்து அவசரமாக வெளியேறி கார் நிறுத்தம் நோக்கி நடந்து செல்வதையும் பின்னர் அதே நாளில் அவர் விமான நிலையம் நோக்கிச் செல்வதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக யஹாயா கூறினார்.
குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 408 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
கெந்திங்கில் திருடப்பட்ட வெ.20 லட்சம் மதிப்புள்ள 200 கேசினோ சில்லுகள் மீட்பு
12 ஆகஸ்ட் 2025, 7:26 AM
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





