யாலா, ஆக. 4- தாய்லாந்தின் யாலாவில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இரு சம்பவங்களில் இரு மலேசியர்கள் உயிரிழந்ததை சொங்க்லாவில் உள்ள மலேசிய அரசதந்திர அலுவலகம் உறுதிப்படுத்தியது.
பெத்தோங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் கெடாவைச் சேர்ந்த 53 வயது மலேசிய ஆடவர் உயிரிழந்த வேளையில் யாலா மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் பினாங்கைச் சேர்ந்த 47 வயது நபர் பலியானதாக அந்த அலுவலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
பெத்தோங்கில் நடைபெற்ற ‘ஓகே பெத்தோங் பைக் வீக்‘ நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கெடாவைச் சேர்ந்த 53 வயது நபர் தனது மனைவியுடன் கடந்த ஆகஸ்டு முதல் தேதி பெத்தோங் வந்ததாக பெத்தோ காவல் துறை தலைமை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பொர்ன்சாய் சுனுவாய் கூறினார்.
ஓய்வு எடுக்கும் நோக்கில் பயணத்தை நிறுத்திய அந்த ஆடவர் கழிப்பறைக்குச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்ததாகவும் பெத்தோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அரை மணி நேரத்தில் உயிரிழந்ததாகவும் அவரின் மனைவி தெரிவித்தார்.
இச்சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்திய போலீசார் குற்றத்தன்மைக்கான எந்த அறிகுறியும் சவப்பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என்று கூறினர்.
இதனிடையே, யாலாவில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் மலேசிய ஆடவர் ஓட்டிச் சென்ற உயர்சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள் நான்கு சக்கர இயக்க வாகனத்துடன் மோதியதாக அரசந்திர அலுவலகம் தெரிவித்தது.
தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளான அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாடாவோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவரது சடலத்தை குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.


