ஷா ஆலம், மே 15 - சொந்தமாக உணவுக் கிடங்கை வைத்திருக்கும்
நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. அவசரகாலம்,
பேரிடர் அல்லது பெருந்தொற்று ஏற்படும் போது குறைந்தது மூன்று
மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்
திறனை இந்த கிடங்கு கொண்டுள்ளது.
பண்டார் சுல்தான் சுலைமானில் அமைந்துள்ள இந்த சிலாங்கூர் உணவுக்
கிடங்கு (ஜி.எம்.எஸ்.) 5,000 டன் அரிசி மற்றும் ஒரு லட்சம் கிலோ
உறைந்த இறைச்சியை பாதுகாத்து வைக்கும் வசதிகயைக் கொண்டுள்ளது
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவசரநிலை, பேரிடர் அல்லது பெருந்தொற்று ஏற்பட்டால் நடமாட்டம்
கட்டுப்படுத்தப்படும். அப்போது குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்கு
மக்களுக்கு தேவையான உணவுப் பொருள் கிடைக்கும். பொதுமக்களுக்கு
நியாயமான விலையில் பொருள்கள் கிடைப்பதையும் இது உறுதி செய்யும்
என அவர் சொன்னார்.
இந்த உணவுக் கிடங்கில் உணவுப் பொருள்கள் நிரந்தரமாக வைக்கப்படாது. ஜெலாஜா ஏஹ்சான் ராக்யாட், ஏஹ்சான் மார்ட் மற்றும் மொத்த விற்பனைச் சந்தைகள் வாயிலாக இங்குள்ள பொருள்கள் அடிக்கடி மாற்றப்படும். மக்களுக்கான மானியத் திட்டத்திற்காக பொருள்களைச் சேமித்து வைப்பதற்கு சிறிதளவு இடம் பயன்படுத்தப்படும் என்றும் அவர்
தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
நிரந்த உணவுக் கிடங்கை அமைப்பதற்காக கோல சிலாங்கூரில் 4.046 ஹெக்டர் நிலத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் தற்போது அதற்கான ஆவண நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமிருடின் கூறினார்.
அனைத்து நடைமுறைகளும் முடிந்து கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் ஓன்றை ஆண்டுகளில் அந்த கிடங்கு கட்டி முடிக்கப்படும். உணவு பாதுகாப்பு என்பது அரிசி மற்றும் இறைச்சியை மட்டும் உள்ளடக்கியிருக்காது. மாறாக, அவ்வப்போது பொருள்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.


