ஷா ஆலம் மே 1 - அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிலாங்கூர் பிரிவின் செயலாளர் தாமசேகரன்.
இவ்வாண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவரிடம் மீடியா சிலாங்கூர் மேற்கொண்ட ஒரு சந்திப்பில் இப்பொழுது தோட்டத் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மிக குறைவானவர்களே உறுப்பினராக இருக்கிறார்கள் என்கிறார்.
தொழிற்சங்கத்தில் சேர எவருக்கும் அழுத்தம் தரப்படுவதில்லை , தொழிலாளர்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே தொழிற்சங்கங்களில் இணைவதாகவும் தெரிவித்தார். அதனால் இப்பொழுது தோட்டத் தொழில் சங்கத்தில் சுமார் 40 விழுக்காடு அந்நிய தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தோட்டத் தொழிற்சங்க உறுப்பினர்களாக சுமார் 3000 தொழிலாளர்கள் மட்டுமே பதிவு பெற்றுள்ளதாகவும். தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வேலை இட மற்றும் தொழில் சிக்கலில் மட்டுமே தொழிற்சங்கம் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். தொழிலாளர்களின் வீடு குறித்த கேள்விகளுக்கு, சிலாங்கூரில் 32 தோட்டங்களில் தொழிலாளர் வீட்டுத் திட்டங்கள் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும்.
அதில் தொழிற்சங்கம் மட்டுமின்றி மற்ற இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் இப் பிரச்சனைகளை தீர்க்க தொழிலாளர்களுக்கு உதவி வருவதாகவும் குறிப்பிட்டார் அவ்வப்போது டாக்டர் பி பி என் அறநிதி வாரியம் வழி (உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதி வழங்கப்படுகிறது), -சொக்சோ, EPF தொடர்பான உதவிகள் வழங்கப்படும். - திருமணப் பதிவு தொடர்பான உதவிகள் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
உறுப்பினர்களிடமிருந்து பெறக்கூடிய சந்தாவை மட்டுமே பெற்று சங்கத்தை வழி நடத்த வேண்டி உள்ளதால் எந்த வித பொருளாதார உதவியையும் உறுப்பினர்களுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவது இல்லை என்றார். மேலும் சமயம் மதம் போன்ற விவகாரங்களுக்கு தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் உதவியை நாடுவதில்லை. நடைமுறையில் உள்ள அணுகுமுறைகளின் படி தோட்ட நிர்வாகங்கள் செயல்படுவதால் இதில் எந்த பிரச்சனையும் எழுவதில்லை என்றார்.
சிலாங்கூர் மாநிலம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால் தோட்டங்களும் விரைவாக மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது கோலசிலாங்கூர் மாவட்டத்திலும் அதனை ஒட்டிய சில பகுதிகளில் மட்டும் இன்னும் தோட்டங்களில் இந்திய தோட்டத் தொழிலாளர்களும் வாழ்வதால் அங்கே தேசிய தோட்டத் தொழில் சங்கத்தின் செயல்பாடுகள் சற்று அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.








