ஷா ஆலம், ஜன.28 - கோழியின் சாணத்திலிருந்து உண்டாகும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த தவறியதால் கோழிப் பண்ணை ஒன்றை மூட உத்தரவிடப்பட்டது.
ஆறு கூண்டுகளில் இறைச்சிக் கோழிகள் வளர்க்கப்படும் அந்த பண்ணையில் கோழிச் சாணம் குவியலாக இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கூறியது.
அந்த கோழிப் பண்ணையை மூடும் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு
முன், ஏழு நாட்களுக்குள் துர்நாற்றம் மாசு தொல்லையை அகற்ற பண்ணை உரிமையாளர்களை அறிவுறுத்தும் அறிவிப்பை கடந்த ஜனவரி 10ஆம் தேதி நகராண்மைக் கழகம் வெளியிட்டது.
கோழி சாணத்தை நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி சரியாக நிர்வகிக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர் துர்நாற்றம் தொடர்பான மாசுத் தொல்லைகளை அகற்றத் தவறியதோடு மேலும் 80,000 புதிய கோழிக் குஞ்சுகளை பண்ணைக்கு கொண்டு வந்ததன் மூலம் பண்ணையை மூடும் உத்தரவையும் மீறியது இம்மாதம் 25ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டது.
உத்தரவுக்கு இணங்கத் தவறிய பண்ணை உரிமையாளரின் நடவடிக்கை துர்நாற்றம் மற்றும் இடையூறு பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அலட்சியத்துடன் செயல்பட்டதை காட்டுகிறது.
இதனால் பொதுமக்கள் நகராண்மைக் கழகத்திடம் புகார் அளித்தனர் என்று அது தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.


