பெட்டாலிங் ஜெயா, செப் 22- மாநிலத்தில் பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் இவ்வாண்டில் இதுவரை 500,000 வெள்ளியை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.
பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இவ்வாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து லட்சம் வெள்ளியில் ஒரு பகுதியாக அந்தத் தொகை விளங்குகிறது என்று சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
அண்மைய சில மாதங்களில் சிலாங்கூரில் பல புயல் பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது நிகழ்ந்து வரும் மற்றும் எதிர்காலத்தில் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பேரிடர்களை எதிகொள்ள எம்.பி.ஐ. எப்போதும் தயார் நிலையில் உள்ளது அவர் சொன்னார்.
பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்க ரொக்க உதவியாகவும், பழுதடைந்த கூரைகளை மாற்றுவது மற்றும் இதர வகை உதவியாகவும் இதுவரை ஐந்து லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் முதல் அமைப்பாக எம்.பி.ஐ. விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
கோத்தா டாமன்சாரா தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோத்தா டாமன்சாராவைச் சேர்ந்த 21 வணிகர்கள் தலா 250 வெள்ளியை நிவாரண நிதியாகப் பெற்றனர். மேலும் குகுசான் டாலியா பஹாருடின் அப்துல் ஹமிட் அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத்திற்கு இந்நிகழ்வில் 10,000 வெள்ளி வழங்கப்பட்டது. இந்த நிதியை கோத்தா டாமன்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஸூவான் காசிம் வழங்கினார்








