ECONOMY

முதலாவது ஆட்சிக்குழு கூட்டத்திற்கு மந்திரி புசார் தலைமை தாங்கினார்

23 ஆகஸ்ட் 2023, 5:09 AM
முதலாவது ஆட்சிக்குழு கூட்டத்திற்கு மந்திரி புசார் தலைமை தாங்கினார்

ஷா ஆலம், ஆக 23- இன்று காலை இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் புதிய தவணைக்கான முதலாவது ஆட்சிக்குழு கூட்டத்திற்கு மந்திரி புசார் தலைமை தாங்கினார்.

மாநில அரசு தலைமைச் செயலகத்தின் 20 மாடியிலுள்ள கூட்ட அறைக்கு காலை 10.00 மணிக்கு வந்த டத்தோஸ்ரீ அதிருடின் ஷாரியை பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தின் தொடக்க அங்கமாக துஆ  ஓதும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் மந்திரி புசார் முன்னலையில் பதவி உறுதி மொழி மற்றும் இரகசிய காப்பு பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர்.

இக்கூட்டம் முடிவுக்கு வந்தப் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த அறிவிப்பை மந்திரி புசார்  வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் பட்டியலை மந்திரி புசார் கடந்த திங்கள் கிழமை வெளியிட்டார். அதில் அனுபவம் வாய்ந்த மூன்று பழைய முகங்களோடு முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் உள்பட ஆறு புது முகங்களும் இடம் பெற்றுள்ளனர்.

தாமான் டெம்ப்ளர் உறுப்பினர் அன்ஃபால் சாரி, பந்திங் உறுப்பின்ர வீ. பாப்பாராய்டு, ஸ்ரீ செத்தியா உறுப்பினர் டாக்டர் முகமது ஃபாஹ்மி ஙா, சுங்கை ஆயர் தாவார் உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில், கோத்தா அங்கிரிக் உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, பண்டார் உத்தாமா உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் ஆகியோரே ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ள புது முகங்களாவர்.

 கின்ராரா உறுப்பினர் இங் ஸீ ஹான், பாண்டான் இண்டார் உறுப்பினர் இஷாம் ஹஷம், தஞ்சோங் சிப்பாட் உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா ஆகியோர் இரண்டாம் தவணைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.