ALAM SEKITAR & CUACA

வெள்ள நிலவரத்தைப் பார்வையிட விடியற்காலை 2.00 மணிக்கு களமிறங்கினார் மந்திரி புசார்

17 நவம்பர் 2022, 3:58 AM
வெள்ள நிலவரத்தைப் பார்வையிட விடியற்காலை 2.00 மணிக்கு களமிறங்கினார் மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 17- பல மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக வெள்ளம் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிள்ளான், தாமான் மெலாவிஸ் பகுதிக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  இன்று விடியற்காலை 2.00 மணிக்கு வருகை புரிந்து நிலைமையை நேரில் கண்டறிந்தார்.

அப்பகுதியில் தாங்கள் மேற்கொண்ட சோதனையில் நீர் இறைப்பு இயந்திரம் முறையாக செயல்பட்டது கண்டறியப்பட்டாகவும் எனினும், மழைப் பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால் நீர் வீடுகளில் புகுந்ததாகவும் அமிருடின் சொன்னார்.

இன்று விடியற்காலை 2.00 மணிக்கு நான் தாமான் மெலாவிஸ் நீர் இறைப்பு பம்ப் நிலையத்திற்கு சென்றேன். அங்குள்ள பம்ப் செட்டுகள் முறையாக செயல்படுகின்றன.

எனினும் அதிக மழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.

விடியற்காலை 2.45 மணியளவில் கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் மற்றும் வடிகால், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகளுடன் தாமான் மெலாவிஸ் குடியிருப்பு பகுதியை தாம் பார்வையிட்டதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடங்கப்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம் சில சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறிய அவர், இந்த தொடர்பில் கே.டி.எம். அதிகாரிகளுடன் தாம் இன்று சந்திப்பு நடத்தவுள்ளதாகச் சொன்னார்.

மழை காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்தது பெருந்தவறு என்று அமிருடின் கடந்த 11 ஆம் தேதி கூறியிருந்தார்.

இத்தகைய இயற்கை பேரிடர்களால் பொதுமக்கள் மட்டுமின்றி பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.