ஷா ஆலம், ஜூலை 22 – இன்று நண்பகல் 3 மணி வரை சிலாங்கூரில் உள்ள 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
அவை கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், சிப்பாங், கோலா லங்காட் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
இதே வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு குறுகியக் கால எச்சரிக்கையாகும்.
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.


