ECONOMY

மாநிலத்தின்  வருமானம் நிர்ணயித்த இலக்கை தாண்டியது- ஆண்டு இறுதியில் வெ.220 கோடியை எட்டும்

28 அக்டோபர் 2022, 9:25 AM
மாநிலத்தின்  வருமானம் நிர்ணயித்த இலக்கை தாண்டியது- ஆண்டு இறுதியில் வெ.220 கோடியை எட்டும்

கிள்ளான், அக் 28- மாநில அரசின் வருமானம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 205 கோடி வெள்ளியைத் தாண்டி 217 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் அந்த தொகை 220 கோடி வெள்ளியை எட்டி விடும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டிருந்த  போதிலும் மாநில அரசு நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக வருமானத்தை ஈட்டியது. அதே போல் இவ்வாண்டும் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் பதிவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் 205 கோடி வெள்ளி வருமானத்தைப் பெறுவதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். கடைசி நேரத்தில் கட்டணத்தை செலுத்தும் நடவடிக்கைகள் வாயிலாக எஞ்சிய இரு மாதங்களில் இந்த வருமானம்  மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நேற்று வரை 217 கோடி வெள்ளி வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியூட்டும் ஒரு அடைவு நிலையாகும். 200 கோடி வெள்ளிக்கும் மேலான தொகை இணையம் வாயிலாகப் பெறப்பட்டது என்று அவர் சொன்னார்.

கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் ஸ்மார்ட்பாக்ஸ் முறையின் விரிவாகத்தை தொடக்கி  வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எதிர்வரும் காலங்களில் மாநில அரசு நிர்வாகத்தில் இலக்கவியல் முறை பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாநில அரசின் நிர்வாகமும் கட்டணம் செலுத்தும் முறையும் இலக்கவியலுக்கு மாறுவதை உறுதி செய்வது வரும் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவுள்ள உருமாற்ற நடவடிக்கைளில் ஒன்றாக விளங்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.