ஷா ஆலம், ஜூலை 30- பயனீட்டாளர்கள் தங்கள் உரிமைகளை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான 2022 ஆம் ஆண்டு பயனீட்டாளர் விழிப்புணர்வு பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பண்டார் பாரு பாங்கி, மார்க்கெட் அருகிலுள்ள திடலில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த விழா நடைபெறும் என்று காஜாங் நகராண்மைக் கழகம் கூறியது.
இந்த நிகழ்வு முதன் முறையாக அடாப் யூத் காராஜ் மற்றும் இஸ்லாமிய சமய விவகாரம், பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில்துறைக்கான ஆட்சிக்குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுவதாக நகராண்மை கழகம் பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
அனைத்து நிலையிலான மக்களுக்கும் பயனீட்டாளரின் உரிமை என்ற தெளிவான விளக்கத்தைத் தரும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அது தெரிவித்தது.
இந்த நிகழ்வில் விற்பனைச் சந்தை, பயனீட்டாளர் பிரசார இயக்கம், பயனீட்டாளர் உரை, சுகாதார பரிசோதனை, அதிர்ஷ்டக் குலுக்கு, வர்ணம் தீட்டும் போட்டி, அம்பு எய்தல் போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








