ஷா ஆலம், பிப் 10- வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு “வியாபாரம்@சித்தம்“ எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மூலதன சுழல் நிதிக்கு விண்ணப்பம் செய்யும்படி இந்த தொழில்முனைவோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 50 தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களில் முதன்மையானவராக பிரியாணி வியாபாரியான எஸ். ரமேஷ் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவருக்கு “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் மூலம் வர்த்தக உபகரணங்கள் வாங்குவதற்கு 9,000 வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் வாகனம் மூலம் உணவு விற்பனை செய்வதற்கு கோஹிஜ்ரா வாயிலாக 50,000 வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டது என்றும் ரோட்சியா தெரிவித்தார்.
[caption id="attachment_460196" align="alignright" width="344"]
தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ,ரோட்சியா இஸ்மாயில்[/caption]
புக்கிட் திங்கியில் நேற்று நடைபெற்ற சித்தம் வர்த்தக உபகரணங்களை ரமேஷிடம் ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
“வியாபாரம்@சித்தம்“ எனும் திட்டத்தின் வாயிலாக இந்திய தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் ஒரு கோடி வெள்ளி சிறப்பு மூலதன சுழல் நிதியை ஒதுக்கியுள்ளது.
வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை பாதியிலே நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.








