ECONOMY

தடுப்பூசி இலக்கவியல் சான்றிதழ் விற்பனை- எண்மர் கைது

19 ஜனவரி 2022, 12:28 PM
தடுப்பூசி இலக்கவியல் சான்றிதழ் விற்பனை- எண்மர் கைது

ஜோகூர் பாரு, ஜன 19- கோவிட்-19 தடுப்பூசி பெறாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யும் இலக்கவியல் சான்றிதழை விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் தனியார் கிளினிக்கைச் சேர்ந்த மூன்று பணியாளர்கள் உள்பட எட்டு பேரை போலீசார் கைது  செய்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 24 முதல் 42 வயது வரையிலான ஆறு பெண்கள் உள்ளிட்ட அந்த எண்மரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஜமான் மாமாட் கூறினார்.

பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் கைதானவர்களில் அந்த இலக்கவியல் சான்றிதழை வாங்கிய ஐவரும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.53 மணியளவில் சம்பந்தப்பட்ட அந்த கிளினிக்கின் உரிமையாளரிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட 44 வயது ஆடவர் மற்றும் தடுப்பூசி பெறாமலேயே சான்றிதழ் பெற்ற மேலும் 30 பேரை தாங்கள் தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

தடுப்பூசியைப் பெற விரும்பாதவர்கள் மற்றும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி நடவடிக்கை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த தடுப்பூசி சான்றிதழைப் பெற விரும்புவோர் வெ. 300 முதல் வெ.650 வரை செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு வாடிக்கையாளர்களைத் தேடும் இடைத்தரகர் கமிஷனாக ஒவ்வொரு சான்றிதழுக்கும் வெ.125 பெறுவார் என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.