ECONOMY

சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 1,083 விசாரணை அறிக்கைகள்- 891 பேர் மீது குற்றச்சாட்டு

6 டிசம்பர் 2021, 8:30 AM
சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 1,083 விசாரணை அறிக்கைகள்- 891 பேர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், டிச 6- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சூதாட்டக் குற்றங்கள் தொடர்பில் 1,083 குற்றப் பத்திரிகைகள் திறக்கப்பட்ட வேளையில் 891 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்செயல் தொடர்பில் நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 2,298 பேர் கைது  செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து 219,930 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் இளம் வயதினராக இருந்த போதிலும் குற்றத்தின் தீவிரம் கருதி போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று இளம் தலைமுறையினர் சம்பந்தப்பட்ட இணைய சூதாட்டம் குறித்து சபாக் உறுப்பினர் அகமது முஸ்தாயின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்தகைய சூதாட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக தமது தரப்பு மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீண்ட காலத் திட்டத்தை வரைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் போலீஸ், தெனாகா நேஷனல் பெர்ஹாட், ஆயர் சிலாங்கூர் ஆகிய தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் இதன் வழி சம்பந்தப்பட்ட சூதாட்ட மையங்களுக்கு சீல் வைப்பது, நீர் மற்றும் மின்சார விநியோகத்தை துண்டிப்பது, அதன் நடத்துனர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன  என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.