சுபாங், நவ 26- அம்பாங்கில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த வாரம் மாநில சட்டமன்றத்தில் சமர்பிக்கும்படி அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் உள்பட சம்பந்தப்பட்ட அரசு துறைகள் பணிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறினார்.
அந்த வெள்ளப் பிரச்சனைக்கு அருகிலுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக அல்லது வேறு பிரச்சனைகள் காணமாக என்பதை கண்டறிவதற்கு இந்த அறிக்கை உதவி புரியும் என்று அவர் சொன்னார்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்பை முறையாக ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனினும், இந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேரின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமாகும். அதன் பின்னரே அச்சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிவதில் தீவிரம் காட்டலாம் என்று அவர் சொன்னார்.
அண்மையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதி வெள்ள அபாயம் உள்ள பகுதி அல்ல என்பதை தெளிவுபடுத்திய அவர், அங்கு வடிகால் முறையும் சீராக இல்லாததை அரசாங்கம் உணர்ந்துள்ளதோடு அப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றார்.








