ஷா ஆலம், நவ 3- தீபாவளியை முன்னிட்டு ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் மூன்று ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்த 166 மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்களுக்கு உணவுப் பொருள்களை வழஙகியது.
“செசாமா மாரா“ எனும் திட்டத்தின் கீழ் மலேசிய அகத்தியர் சமூக நல சங்கம், சாய் பாண்டியன் ஆதரவற்றோர் இல்லம், சிலாங்கூர் ஏசுவின் மாளிகை சமூக நல இயக்கம் ஆகிய அமைப்புகளுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
உணவுப் பொருள்கள் தவிர்த்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டதோடு இரு சமூக நல இல்லங்களில் குழாய்களை பழுதுபார்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த “செசமா மாரா“ திட்டத்தின் கீழ் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தொடர்ந்து உதவி வரும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.
வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையின் போது பேறு குறைந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டம் அமல் படுத்தப்பட்டது என்றார் அவர்.
இது தவிர பாக்ஸ் ஆஃப் ஹோப் (நம்பிக்கை பெட்டி) எனும் திட்டத்தின் கீழ் சுங்கை பீலேக், காப்பார், ஜெராம், கோல சிலாங்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 பேருக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு வழங்கியது என்பது குறிபிடத்தக்கது.








