கோலாலம்பூர், செப் 30- கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த நோய்த் தொற்றைக் கையாள்வதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை கூட்டாக எடுப்பதற்கு இத்தகைய வெளிப்படை போக்கு அவசியமாவதாக பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸாலினா ஓத்மான் கூறினார்.
சரியான இலக்குகளையும் வியூகங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வகுப்பதற்கு இந்த தரவுகள் உதவும் என்பதால் அரசாங்கம் அதனை இனியும் மறைத்து வைத்திருக்க க்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
கோவிட்-19 தரவுகள் விஷயத்தில் நான் அரசாங்கத்தின் போக்கை கடிந்து கொள்ள விரும்புகிறேன். கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் தடுப்பூசி தொடர்பான பிரச்சனைகளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்நோக்கிய போதிலும் போதுமான தரவுகள் இல்லாத நிலையை அவர்கள் எதிர்நோக்கினர் என்றார் அவர்.
மீட்சிக்கான அனைத்து வியூகங்களும் சாத்தியமாவதற்கு ஏதுவாக அந்நோய்த் தொற்று தொடர்பான போதுமான அளவு விபரங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மக்களவையில் இன்று 12 வது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோவிட்-19 சவால்களை குறிப்பாக தடுப்பூசி விநியோகப் பிரச்னையை எதிர்நோக்கியதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னையை வெற்றிகரமாக கையாண்டு விட்டோம் என அரசாங்கம் இப்போது கூறிக் கொள்ளலாம். ஆனால் அரசியல்வாதிகளின் அந்த வெற்றிக்கு முன்களப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் பெரிதும் உதவியுள்ளனர் என்றார் அவர்.








