ஷா ஆலம் ஜூன் 19- குப்பை அகற்றும் பணி உள்ளிட்ட சில அன்றாட சேவைகளின் தரம் சி5ஐ விவேக சிலாங்கூர் நடவடிக்கை மையத்தின் வாயிலாக தரம் உயர்த்தப்படும்.
இவ்வாண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அந்த விவேக கட்டுப்பாட்டு மையத்தின் வாயிலாக குப்பை அகற்றும் சேவையின் தரத்தை 30 விழுக்காடு வரை அதிகரிக்க முடியும் என்று ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபஹாமி ஙா கூறினார்.
இது தவிர இதர சேவைகளின் திறனும் மேம்பட்டுள்ளதாக அவர் சொன்னார். குறிப்பாக, ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையின் தரம் 80 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதோடு 59 பேரிடர் சம்பவங்கள் தொடர்பான மேலாண்மை காலம் 75 விழுக்காடு குறைந்துள்ளது என்றார் அவர்.
உதாரணத்திற்கு, குப்பை அகற்றும் லோரிகள் மற்றும் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை கண்காணிப்பதற்கு பொதுமக்களின் புகார் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ். கருவியை பயன்படுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பஸ் அல்லது லோரி குறிப்பிட்ட நேரத்தில் புறப்படத் தவறினால் கட்டுப்பாட்டு அறை அந்த வாகனங்களுக்கு சமிக்ஞை அனுப்பி நினைவூட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில அரசு செயலகத்தின் வர்த்தக பிரிவினால் நிர்வகிக்கப்படும் கோவிட்-19 தொலைபேசி சேவை சீரான முறையில் செயல்படுவதோடு தினசரி சராசரி 60 தொலைபேசி அழைப்புகளையும் பெறுவதாக அவர் மேலும் கூறினார்.








