ஷா ஆலம், ஜூன் 16- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்குவற்கான நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்நோய்த் தொற்று காரணமாக இறந்தவர்கள் தொடர்பான தரவுகளை கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் உதவி நாடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில சுகாதாரத் துறையின் வசமுள்ள தரவுகளின் வழி இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்கு கிடைத்து விடும். பிறகு அவர்களின் வாரிசுகளை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
நோய்த் தொற்று காரணமாக இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் இரகசியமானவை என்பதால் அதனை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆகவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குவதில் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றால் இறந்த இந்த சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா 1,000 வெள்ளி மரண சகாய நிதியாக வழங்கப்படும் என்று மந்திரி புசார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் அமலாக்கத்திற்காக 15 லட்சம் வெள்ளி கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத் தகவலையும் அவர் வெளியிட்டார்.








