ECONOMY

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உதவி

4 ஜூன் 2021, 12:38 PM
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உதவி

ஷா ஆலம், ஜூன் 4- முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வசதி குறைந்த மக்களுக்கு உதவித் திட்டத்தை மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தங்களின் அன்றாட வருமானத்தை இழந்தவர்களுக்கு மட்டுமின்றி கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் இயன்ற உதவிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

பொது முடக்கம் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தங்களின் சேவை மையம் வாயிலாக உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு அரிசி, கோதுமை, மீகூன், கிச்சாப் போன்ற உணவுப் பொருள்கள் வழங்கப்படும். தற்போது கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை இலக்காக கொண்டு தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாக  கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

குறிப்பாக, உணவு பற்றாக்குறை பிரச்னையை எதிர்நோக்கிய ஷா ஆலம், செக்சன் 16, பி.கே.என்.எஸ். அடுக்குமா குடியிருப்பை  சேர்ந்த 13 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக உதவிகளை வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது  பதிவு செய்திருந்த சுமார் 400 பேரை தாங்கள் நடப்பு பொது முடக்க காலத்தில் மீண்டும் தொடர்பு கொண்டுள்ளதாக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

இத்தரப்பினரில் பெரும்பாலோர் தினசரி வருமானத்தைப் பெறும் தரப்பினராவர். ஆய்வுக்குப் பிறகு உதவி தேவைப்படுவோருக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்களை தாங்கள் விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.