ஷா ஆலம், மே 28- கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை வைக்க செலாயாங் மருத்துவமனையில் விஷேச கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே போன்ற கொள்கலன்கள் ஏற்கனவே சுங்கை பூலோ மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இறந்தவர்களின் உடல்களை பத்திரப்படுத்தி வைப்பதற்காக இந்த கொள்கலன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
கூடுதலாக இருபது உடல்களை வைப்பதற்குரிய வசதிகளை கொண்ட இந்த கொள்கலனை செலாயாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு தயார் செய்துள்ளது. மருத்துவமனையின் சவக்கிடங்கில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை களையும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தது.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இந்நோய்த் தொற்றினால் 59 மரணச் சம்பவங்கள் பதிவாகின.
கடந்தாண்டு இந்நோய்த் தொற்று பரவியது முதல் இது வரை 2,491 பேர் உயிரிழந்துள்ளனர்.


