காஜாங், மே 3- சிலாங்கூரில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு மாநில அரசு அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளதாக மந்திரி புசார டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பொது முடக்கத்தின் போது மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் கல்வியமைச்சு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நேற்று விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டி வரும். மாணவர்கள் வீடு திரும்புவது, நோன்பு பெருநாள் மற்றும் ரமலான் சந்தைகள் தொடர்ந்து செயல்படுவது ஆகியவை குறித்து நாம் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பான பரிந்துரைகள் நாளை கூட்டரசு அரசாங்கத்துடன் நடைபெறும் சந்திப்பின் போது முன்வைக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள ரெசிடென்சி அடாலியாவில் சிலாங்கூர் கூ வீடுகளை வாங்கியோரிடம் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாரம் பதிவாகியுள்ள கோவிட்-19 சம்பவங்களுக்கு ரமலான் சந்தைகள் மற்றும் பேரங்காடிகள் நோய் பரவும் இடங்களாக உள்ளதா என்ற கேள்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அமிருடின் சொன்னார்.








