ஷா ஆலம், மே 2- ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையைப் பயன்படுத்தும் அந்நிய நாட்டினரிடமிருந்து 33.000 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டண வசூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் இந்த தொகை பெறப்பட்டதாக போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை பயன்படுத்தும் அந்நிய நாட்டினருக்கு 90 காசு கட்டணம் விதிக்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த இலவச பஸ் சேவை உள்நாட்டிருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. எனினும், அந்நிய நாட்டினர் இந்த சேவையைப் பயன்படுத்துவதை தடுக்க விரும்பாத காரணத்தால் அவர்களுக்கு 90 காசு கட்டணம் விதிக்கிறோம் என்றார் அவர்.
இந்த பஸ் சேவையை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்கு அந்நிய நாட்டினருக்கான இந்த கட்டண விதிப்பு நடவடிக்கை துணை புரிகிறது.








