ஷா ஆலம், மார்ச் 24- முஸ்லீம் அல்லாதோர் தங்கள் பிரசுரங்களில் அல்லாஹ் என்ற வார்த்தையை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் உத்தரவிட்டுள்ளார்.
பைபிள் நூலில் (மலாய் மொழியாக்கப் பதிப்பு) அல்லது கிறிஸ்துவ சமய எழுத்துப் படிவங்களில் எந்த ரூபத்திலும் அல்லாஹ் வார்த்தை பயன்படுத்தப்படுவதற்கு சிலாங்கூரில் முற்றாக தடை விதிக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
அல்லாஹ் வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த உயரிய பதத்தை வேறு எந்த இடத்திலும் பயன்படுத்தப்படுத்தவோ அல்லது முஸ்லீம்களின் எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் குறிப்பிடவோ கூடாது என்று அவர் தெரிவித்தார்.
எனினும், “GOD” என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையாக இறைவன் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில் தமக்கு எந்த ஆடசேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் அல்லாஹ் வார்த்தையின் புனிதத்தை காக்கும் பொறுப்பு அனைத்து முஸ்லீம்களுக்கும் குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
முஸ்லீம் அல்லாத சமயத்தினர் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதைப் போல் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையை முஸ்லீம் அல்லாதோர் எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம் அல்லாதோர் “அல்லாஹ்”, “பைதுல்லா”, “சோலாட்”, “காஃபா” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவற்கு உள்துறை அமைச்சு கடந்த 1986ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி விதித்த தடை செல்லத்தக்கது அல்ல என்பதோடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி நோர் பீ அரிபின் கடந்த மார்ச் 10ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இம்மாதம் 15ஆம் தேதி மேல் முறையீடு செய்துள்ளது.








