ஷா ஆலம், மார்ச் 3- கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் மேலும் நான்கு இடங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வார இறுதியில் நடத்தப்படவுள்ளது.
சுபாங் பெர்டானா, ஸ்ரீ கெம்பாங்கான், கோத்தா டாமன்சாரா, ஷா ஆலம் ஆகிய இடங்களில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இலவச பரிசோதனை இயக்கம் நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுபாங் பெர்டானாவிலுள்ள ரெசாக் எம்.பி.எஸ்.ஏ. மண்டபம் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான், எம்.பி.எஸ்.ஜே. பல்நோக்கு மண்டபம் ஆகியவற்றில் வரும் மார்ச் 6ஆம் தேதியும் கோத்தா டாமன்சாரா, செக்சன் 2, பல்நோக்கு மண்டபம் மற்றும் ஷா ஆலம், செக்சன் 15, டத்தாரான் ஆட்டோமோபில் வளாகத்தில் மார்ச் 7ஆம் தேதியும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண்பதில் இந்த பரிசோதனை இயக்கம் பேருதவி புரியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நோய்த் தொற்று அதிகம் பரவக்கூடிய சாத்தியம் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய இலவச பரிசோதனை இயக்கம் அதிகளவில் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் கடந்த மாதம் 20ஆம் தேதி கூறியிருந்தார்.
மாநில அரசு மற்றும் மாவட்ட சுகாதார இலாகா இடையே நடத்தப்படும் சந்திப்பு மற்றும் கைவசம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் இலவச பரிசோதனையை நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


