பெட்டாலிங் ஜெயா, பிப் 1- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உணவு வங்கித் திட்டத்தின் வழி உதவும் முயற்சியில் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நோய்த் தொற்றினால் வருமான இழப்புக்கு ஆளான தரப்பினரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மக்கள் பரிவுத் திட்டத்தின் வாயிலாக இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.
அத்தியாவசியப் பொருள்களான அரிசி, மைலோ, பால் மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் போன்ற பொருள்கள் அந்த உதவித் திட்டத்தின் வழி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் ஒதுக்கீடு கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படும். எனினும் தற்போதைக்கு கைவசம் உள்ள நிதியைக் கொண்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை தொகுதியிலுள்ள சுமார் மூவாயிரம் பேருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








