ஷா ஆலம், ஜன 6- ரவாங்கிலுள்ள ஜாலான் பெரிண்டுஸ்திரியான் இவ்வாண்டு தரம் உயர்த்தப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
ரவாங் நகர் முதல் ரவாங் டோல் சாவடி வரையிலான அந்த சாலையில் காணப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
சுமார் 44 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பகுதி மக்களின் 20 ஆண்டுகாலப் பிரச்னையாக இப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு நானும் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கீனும் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டோம் என அவர் மேலும் சொன்னார்.
இச்சாலையை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்படவிருப்பதை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது பொதுப்பணித்துறை உறுதிப்படுத்தியதாக கூறிய அவர், இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான குத்தகையாளரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.








