காங்கார், ஆகஸ்ட் 25 — சமீபக் காலமாக தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களான பட்டாணி, யாலா மற்றும் நாராதிவாட் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்து வரும் பாதுகாப்பு மருட்டல் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் தங்களது அத்தியாவசியமற்ற பயணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என
சொங்க்லாவில் உள்ள மலேசியத் தூதர் அகமட் ஃபஹ்மி அகமட் சர்காவி கேட்டுக் கொண்டார்.
"மலேசியர்கள் பாதுகாப்பு மருட்டல் உள்ள சம்பவங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு, சாலை மூடல்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்ட தாய்லாந்து அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்," என்று பெர்லிஸ், இஸ்தானா அராவ் இலிருந்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) இரவு 10:15 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) அதிகாலை 5:00 மணி வரை நாராதிவாட் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் இதற்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.
இம்மாகாணங்களில் குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் மற்றும் டயர்கள் எரிக்கப்பட்டது உட்பட 50-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும், தங்களது பயணத் திட்டங்களை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்குமாறும் அவர் மலேசியர்களை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், தாய்லாந்திற்குள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் மலேசியர்கள், MyJPJ செயலியில் உள்ள டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை மட்டுமே நம்பியிருக்காமல், தங்களது அசல் (பிஸிக்கல்) ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று ஃபஹ்மி அறிவுறுத்தினார்.
"வாகனப் பதிவு, காப்பீடு (இன்சூரன்ஸ்) மற்றும் தேவையான இதர முக்கிய ஆவணங்களை பயணம் முழுவதும் உடன் வைத்திருக்க வேண்டும். இது அதிகாரிகளின் சோதனைகளை எளிதாக்க உதவும்.தாய்லாந்தில் வாகனம் ஓட்டும் அல்லது பயணிக்கும் மலேசியர்கள் எப்போதும் சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணிய வேண்டும் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளால் அமல்படுத்தப்படும் அனைத்து போக்குவரத்து விதிகளையும் மதிக்க வேண்டும்," என்று அவர் நினைவுறுத்தினார்.
தாய்லாந்து அதிகாரிகள் தற்போது மலேசியப் பதிவு பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து விதிகளையும், ஆவணச் சரிபார்ப்புகளையும் தீவிரமாக அமல்படுத்தி வருவதாகவும், விதிகளை மீறிய பல மலேசிய ஓட்டுநர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஃபஹ்மி மேலும் தெரிவித்தார்.






