ஷா ஆலாம்,ஆகஸ்ட் 24 - சுபாங் ஜெயாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவொன்றில், கடந்த சனிக்கிழமை இரவு இராட்டினம்(roller coaster) சம்பந்தப்பட்ட விபத்தில் பத்து பேர் காயமடைந்ததாக , சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது என்றும், இதுகுறித்த புகார் நேற்று காலை 11.45 மணிக்கு போலீசாருக்குக் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், விபத்து நடந்தபோது 11 முதல் 44 வயதுக்குட்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் உட்பட மொத்தம் 22 பேர் அந்த ராட்டினத்தில் சவாரி செய்தனர்.
அந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள மருத்துவ மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதால், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் எந்தவொரு ஊகங்களையும் அல்லது வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று வான் அஸ்லான் அறிவுறுத்தியுள்ளார்.




