சாபாக் பெர்னாம், ஆகஸ்ட் 22 - தற்போது நிலவி வரும் வெப்பமான , வறண்ட வானிலை மழையின்றி நீடித்தாலும், சிலாங்கூர் மாநிலத்தின் அணைகள் மூன்று மாதங்கள் வரை நீர் விநியோகத்தைத் தக்கவைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த நீர்மட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
" சுங்கை லங்காட் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவது சாதாரணமானதுதான், இது இரண்டு மாதங்களுக்கு முன்பும் நடந்தது, ஆனால் இறைவன் நாடினால் அது மீண்டும் நிரம்பும்.
இருப்பினும், சிலாங்கூரில் உள்ள பிற அணைகளின் நீர்மட்டம் 85 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது," என்று அவர் கூறினார்.
சுங்கை லங்காட் அணையின் நீர்மட்டம் சுமார் 78 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், பிற முக்கிய அணைகளின் நீர்மட்டம் சீராக உள்ளதாக இஷாம் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த நீர் விநியோகத் திறனானது, லேசான மழை மற்றும் ஆற்றுப் புற சேமிப்பு (ORS) அமைப்புகள் உள்ளிட்ட மாற்று ஆதாரங்கள் மூலம் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





