இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2 ) தற்போது அமலாக்கத்தில்

21 ஆகஸ்ட் 2026, 5:41 PM
இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2 )  தற்போது அமலாக்கத்தில்

ஷா ஆலம், ஆகஸ்ட் 21 : இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2) தற்போது திட்டமிடல் கட்டத்திலிருந்து அமலாக்கக் கட்டத்திற்கு மாறியுள்ளது.

இந்த ஐந்து ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் தங்களின் பங்களிப்பு குறித்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அமைப்புகளுக்கு விளக்கமளிக்கத் தொடங்கப்பட்டுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த விளக்க உரை, RS-2 திட்டத்தின் திட்டமிடல் கட்டம் நிறைவடைந்த பிறகு, அதன் அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள மாவட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய முதல் அதிகாரப்பூர்வ அமர்வாகும்.

"இதற்கு முன்பு, விளக்கவுரைகள் திட்டமிடலில் மட்டுமே கவனம் செலுத்தின; ஆனால் இப்போது திட்டமிடல் முடிந்துவிட்டது. எனவே, அவர்கள் இலக்குகளைச் செயல்படுத்தவும், மைக்ரோ (நுண்ணிய) மட்டத்தில் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டிய நேரம் இது" என்று இன்று கான்கார்ட் ஹோட்டலில் நடைபெற்ற RS-2 அறிமுக விழா மற்றும் ஊடக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் விளக்கமளிப்பு கூட்டத்தில் உரையாற்றிய மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி :படம் -மீடியா சிலாங்கூர்

புதிய கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் கூடுதல் திட்டப்பணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக, RS-2 திட்டம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்குள் அது மறுஆய்வு செய்யப்படும் என்றும் அமிருடின் கூறினார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தை (RS-1) செயல்படுத்திய அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு, அடிமட்ட அளவில் திட்ட அமலாக்கத்தை விரைவுபடுத்துதல் மற்றும் நிதி வழிமுறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் விளக்கமளிப்பு கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் : படம் -மீடியா சிலாங்கூர்

முன்னதாக தனது உரையில், சிலாங்கூர் மாநிலம் நிர்ணயித்த 80 சதவீத இலக்குடன் ஒப்பிடுகையில், RS-1 திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்குகளில் 79 சதவீதத்தை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

மறுஆய்வு செய்யப்படாத மீதமுள்ள 21 சதவீதம் குறித்து கேட்கப்பட்டபோது, RS-1 திட்டத்தின் அமலாக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அரசு, RS-2 திட்டத்தின் விநியோகத்தை மேம்படுத்த பயன்படுத்தும் என்று அமிருடின் கூறினார்.

RS-2 திட்டத்தைப் பொறுத்தவரை, திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதை எளிதாக்குவதற்காக மாநில அரசு சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் விளக்கமளிப்புத் திரையை பார்வையிட்டார் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி : படம் - மீடியா சிலாங்கூர்

அதே நேரத்தில், சிலாங்கூர் மாநிலம் வறுமை விகிதம் உள்ளிட்ட வழக்கமான பொருளாதாரக் குறிகாட்டிகளுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தில் முறையான மற்றும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதற்கான ஒரு குறியீட்டை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முழு சிலாங்கூர் மாநிலத்திலும் பொருளாதார நிலைகள் வேறுபடுவதால், இந்த குறியீட்டின் மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகள், ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளின் அடிப்படையில் மாநில அரசு தனது உதவிகளை வடிவமைக்க உதவும் என்று அமிருடின் கூறினார்.

"முழு மாநிலத்திற்கும் ஒரே ஒரு குறிகாட்டியை மட்டுமே இனி பயன்படுத்த முடியாது. ஏனெனில் நம் மாநிலம் பன்முகத்தன்மை கொண்டது, அதன் தேவைகள் அதிகம் மற்றும் ஒவ்வொரு பகுதியும் தனக்கே உரிய சிக்கல்களைக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட RS-2 திட்டம், மாநில அரசு மட்டுமின்றி உள்ளூர் அதிகாரிகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC) மற்றும் தனியார் துறையினரையும் உள்ளடக்கிய பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு திட்டத்தின் சாத்தியக்கூறுகளையும் மாநில அரசு மதிப்பீடு செய்த பின்னரே, 98 திட்டப்பணிகள் மற்றும் திட்டங்கள் மட்டுமே RS-2 இல் சேர்க்கப்பட்டுள்ளன என்று அமிருடின் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.