
ஷா ஆலாம், ஆகஸ்ட் 15 – 2026 சுக்மா- மலேசிய விளையாட்டுப் போட்டியில் 80 தங்கப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த வெற்றியாளராக மீண்டும் வாகை சூடும் நோக்கில் சிலாங்கூர் மாநிலக் குழு தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
சொந்த மண்ணில் விளையாடுவது விளையாட்டு வீரர்களுக்கு ஓர் அழுத்தமாக இருந்தாலும், அதனை அவர்கள் ஓர் உந்துசக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென சிலாங்கூர் மாநில அணித் தலைவர் அப்பாஸ் ஆஸ்மி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில வீரர்களின் தயார் முறைகள், உடற்தகுதி மற்றும் உளவியல் ரீதியான பயிற்சிகள் தமக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், போட்டியின் இறுதி முடிவுகள் அன்றைய நாளின் சூழ்நிலை,வீரர்களின் மனநிலை, வானிலை போன்ற காரணங்களால் மாறக்கூடும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போதைய நிலவரப்படி 80 தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்கை அடைய சிலாங்கூர் வீரர்கள் 80 முதல் 85 விழுக்காடு தயாராக இருப்பதாக அவர் உறுதிபடக் கூறினார்.
அதே வேளை வீரர்களிடையே 'வெற்றியாளர்' என்ற மனப்பான்மையையும், தெளிவான இலக்கையும் வளர்ப்பதன் அவசியத்தை அணித் தலைவர் அப்பாஸ் ஆஸ்மி வலியுறுத்தினார்.
அதனால்தான், தங்களின் முழக்கமாக "சிலாங்கூர் வெற்றியாளர்" (Selangor Juara) என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் விவரித்தார்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிலாங்கூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வீரர்கள் தங்களின் விளையாட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
22-வது சுக்மா விளையாட்டுப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 15) முதல் ஆகஸ்ட் 24 வரை சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 52 விளையாட்டு அரங்குகளில் நடைபெறுகின்றன.
இதில் 37 வகையான விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சுக்மா (Para SUKMA) போட்டி செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறவுள்ளது.










