
ஷா ஆலம், ஆகஸ்ட் 14: சுக்மா-மலேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் சுமார் 30,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரவு (ஆகஸ்ட் 15) ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில் (Dataran Kemerdekaan Shah Alam) நடைபெறவுள்ள அந்த விழாவில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.
திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழா பொதுமக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருமென சிலாங்கூர் மந்திரி பெசார் கழக(MBI) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டி.எஸ் சைபுல்யாசான் எம் யூசோப் (Dato' Ts Saipolyazan M Yusop) தெரிவித்தார்.
இதன் மூலம் பொதுமக்கள் மாநிலக் குழுக்களின் அணிவகுப்பைக் காணவும், விளையாட்டு வீரர்களை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
"முன்பெல்லாம் அரங்கில் போட்டிகள் நடக்கும்போது, நாம் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து கொண்டு, அவர்கள் தடகளத்தில் அணிவகுத்து மைதானத்தின் நடுவே வருவதைப் பார்ப்போம். ஆனால், இம்முறை பார்வையாளர்கள் போட்டியிடவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மிக அருகில் இருப்பார்கள். இந்த நேரடித் தொடர்பு இங்கு வருபவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று நான் நினைக்கிறேன்," என்று சைபுல்யாசான் குறிப்பிட்டார்.
மீடியா சிலாங்கூர் தயாரித்த ' நடப்பு கலந்துரையாடல்' (Bicara Semasa) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களை முதன்மைக் கதாபாத்திரங்களாக மாற்றுவதோடு, பொதுமக்களையும் இந்தத் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக மாற்றுவதே இந்த அணுகுமுறையின் நோக்கமாகும்.
இந்தத் தொடக்க விழாவில் புரூணை உட்பட 15 மாநிலக் குழுக்களின் அணிவகுப்பு நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 45 முதல் 50 விளையாட்டு வீரர்கள் கலந்துக் கொள்வார்கள்.
இது தவிர, கொடியேற்றம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகளும் நடைபெறும்.
விழாவின் முக்கிய அம்சமாக விளங்குவது தீப்பந்தத்தை ஏற்றி வைக்கும் நிகழ்வாகும்.
சிலாங்கூர் சுக்மா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் இந்த தீப்பந்தத்தை ஏற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க விழாவின் கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஐந்து பிரபல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
சுக்மா 2026-ன் கருப்பொருள் மற்றும் அனைத்து தலைமுறை பார்வையாளர்களுக்கும் ஏற்ற பாடல்களை அவர்கள் பாடவுள்ளனர்.
மேடை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, பார்வையாளர்கள் இன்று மாலை 3 மணி முதல் 'பி' திடலில் (Padang B) தொடங்கும் 'பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் ஃபெஸ்டா' (Fiesta Platform Selangor - PLATS) வணிகச் சந்தையிலும் கலந்துகொள்ளலாம்.











