ஷா ஆலாம், ஆகஸ்ட் 14 - நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 6% வளர்ச்சி கண்டுள்ளது என மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia) தெரிவித்தது.
நிலையான உள்நாட்டுத் தேவை மற்றும் வலுவான ஏற்றுமதித் துறை ஆகியவற்றின் பலனாக அந்த பொருளாதார வளர்ச்சி பதிவுச் செய்யப்பட்டது.
நிலையான வருமான உயர்வும் கொள்கை ஆதரவும் குடும்பச் செலவினங்கள் அதிகரிக்க வித்திட்டன.
அதே வேளை உட்கட்டமைப்புகள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான செலவினங்கள் முதலீட்டு வளர்ச்சிக்கு வித்திட்டதாக மத்திய வங்கி கூறியது.
இதனிடையே, மின்சாரம் & மின்னியல், சேவைத் துறைகள், அத்துடன் திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் மின்சாரம் அல்லாத பிற உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி ஆகியவை நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியை பெருமளவில் உந்தச் செய்தன.
"மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான அடித்தளத்தில் உள்ளது. 2026-ஆம் ஆண்டின் வளர்ச்சி 4% முதல் 5% வரையிலான முன்னறிவிப்பு வரம்பிற்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அண்மைக்கால முன்னேற்றங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சி சுமார் 5% ஆக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.
"பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்ந்து வெளிப்புற முன்னேற்றங்களால் வடிவமைக்கப்பட்டாலும், மலேசியா இந்த சவால்களை ஒரு வலுவான நிலையிலிருந்தும் கொள்கை ரீதியான தயார் நிலையிலிருந்தும் எதிர்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது," என்று மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்தார்.

ஆண்டின் முதல் காலாண்டில் 1.6% ஆக இருந்த ஒட்டுமொத்த பணவீக்கம் இரண்டாவது காலாண்டில் 1.9% ஆக உயர்ந்தது; ஆனால் அடிப்படைப் பணவீக்கம் முந்தைய காலாண்டின் 2.1% உடன் ஒப்பிடும்போது 1.9% ஆகக் குறைந்துள்ளது என மத்திய வங்கி கூறியது.
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட அதிக வெளிப்புற செலவின அழுத்தங்களே ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்குக் காரணம் என்று அது சுட்டிக்காட்டியது.
இது குறிப்பாக RON97 மற்றும் டீசல் போன்ற எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் பெரும்பாலும் நிலையானதாக நீடித்ததாகவும் மத்திய வங்கி தெரிவித்தது.






